பசிஃபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சிறிய தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் திங்கள்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: பப்பு நியூ கினியா தலைநகர் போர்ட் மோர்ஸ்பியிலிருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நியூ பிரிட்டன் தீவை மையமாகக் கொண்டு திங்கள்கிழமை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 28 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள்சேதம், உயிர்சேதம் குறித்து இதுவரை தகவல் இல்லை என்று அந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.