போர்க் குற்றங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க இலங்கை அரசுக்கு கூடுதல் அவகாசம் அளிப்பது சரியல்ல என்று அந்நாட்டின் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடைபெற்ற உச்ச கட்டப் போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும், போர்க் குற்றங்கள் அரங்கேறியதாகவும் பரவலாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இலங்கை பாதுகாப்புப் படையினர் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்ததாக ஐ.நா. அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவும், தமிழர்களை மீள் குடியேற்றம் செய்யவும் வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் மந்தமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறி இலங்கை அரசுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கடந்த மாதம் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், போர்க் குற்றங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க மேலும் 2 ஆண்டு காலம் அவகாசம் வேண்டும் என்று இலங்கை தரப்பில் ஐ.நா.விடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
போரின்போது மாயமான தமிழர்கள் எத்தனை பேர் என்பது குறித்த தகவல்களை இலங்கை அரசு இதுவரை வெளியிடவில்லை. இந்த விவகாரத்தில் தொடர்புடைய இலங்கை ராணுவ வீரர்களைப் பாதுகாப்பதற்கே அதிபர் சிறீசேனா தலைமையிலான அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்திய எந்த விஷயங்களையும் இலங்கை அரசு மேற்கொள்ளவில்லை. இதனை, ஐ.நா. பிரதிநிதிகள் நேரில் வந்து பார்வையிட்டாலே அறிந்து கொள்ள முடியும். நிலைமை இப்படியிருக்க போர்க் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க இலங்கை அரசுக்கு கூடுதல் அவகாசம் அளிப்பது சரியாக இருக்காது என்றார் அவர்.