இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மொசூல் நகரை முற்றிலுமாக மீட்க நடைபெற்று வரும் தாக்குதலில் பொதுமக்கள் பலியானது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராக் அரசு தெரிவித்தது.
இது தொடர்பாக இராக் ராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா ரசூல் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: இஸ்லாமிய தேசபயங்கரவாதிகள், அப்பாவிப் பொதுமக்களை கூட்டமாக நிறுத்தி வைத்து வெடிபொருள் நிரப்பிய வாகனங்களை வெடிக்கச் செய்து வருகின்றனர். இராக் ராணுவத்தின் தாக்குதலால்தான் அப்பாவிகள் பலியானதுபோன்ற தோற்றத்தை பயங்கரவாதிகள் எழுப்பிவருகின்றனர். மேலும் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழுள்ள கட்டடங்களில் பொதுமக்களை மனிதக் கேடயமாக நிறுத்திவருகின்றனர். இதனால்தான் பொதுமக்கள் உயிரிழப்பு நேரிடுவதாகத் தெரிகிறது. தற்போது தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்தனர் என்று கூறப்படுவது தொடர்பாக அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.
மொசூலின் மேற்குப் பகுதியை மீட்கும் தாக்குதல் நடவடிக்கையில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தனர் என்று கூறப்பட்டாலும் இதுவரை எண்ணிக்கை எதுவும் உறுதி செய்யப்படவில்லை.