நியூயார்க்: செய்தி பரிமாற்ற செயலியான வாட்சப்பை பயன்படுத்தி தீவிரவாதிகள் எளிதாக தகவல் பரிமாற்றம் செய்து கொள்தாவதாக இங்கிலாந்து உள்துறை செயலர் அம்பர் ரூட் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனத்திற்குஅவர் அளித்துள்ள பேட்டியில் இருந்து சில பகுதிகள் அமெரிக்காவின் ரீகோட் செய்தி தளத்தில் வெளியாகியுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வாட்சப் மற்றும் அதனைப் போன்ற பல்வேறு செய்தி பரிமாற்ற செயலிகள் மூலம் தீவிரவாதிகள் தங்களுக்குள் ரகசியமாக தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும்
முன்பெல்லாம் சந்தேகத்துக்கிடமான செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க சட்டப்பூர்வமாக அவர்களின் கடிதங்களை படித்தல், தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டி இருந்தது.
ஆனால் தீவிரவாதிகள் தற்பொழுது வாட்சப் உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்தி ரகசியமான முறையில் தகவலை பரிமாற்றம் செய்யும் பொழுது, தீவிரவாத தடுப்பு நுண்ணறிவு செயல்களில் ஈடுபடும் நமக்கும் அத்தகைய செய்திகளை இடைமறித்துக் கேட்கும் வசதிகள் இருக்க வேண்டும்.
மேலும் இதர சமூக வலைத்தளங்களான கூகிள், டிவிட்டர் மற்றும் வலைப்பூ சேவைகளை அழிக்கும் வேர்ட்பிரஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த விஷயத்தில் நமக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் லண்டன் பாராளுமன்றம் அருகே நடைபெற்ற கார் குண்டு தாக்குதலில் ஈடுபட்ட காலித் மசூத் என்னும் தீவிரவாதி, தன்னுடைய காரை மோதுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக வாட்சப் மூலம் தகவல் அனுப்பியது தற்பொழுது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதே போல் கடந்த 2015-ஆம் ஆண்டு அமெரிக்காவின் சான் பெர்னாண்டினோ நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதியின் ஐபோன் சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்டது. அதில் உள்ள தகவல்களை பெறுவதற்காக ஆப்பிள் நிறுவனத்தை அமெரிக்க புலன் விசாரணை அமைப்பான எப்.பி.ஐ அணுகிய பொழுது பயனாளர்களின் தகவல் பாதுகாப்பு மற்றும் அந்தரங்கத்தை சுட்டிக்காட்டி ஆப்பிள் நிறுவனம் மறுத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.