அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணமாக வருவதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்தார். டிரம்ப்பின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்றதை அடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடி மேற்கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார். டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை ஏற்று இந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் மேற்கொள்ளவிருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பயணத்தின்போது ராணுவ ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து மோடி அமெரிக்க அதிபருடன் விரிவாக பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அண்மையில் டிரம்ப் அறிவித்த விசா கட்டுப்பாடுகளால் இந்திய மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்தும் மோடி விளக்கமாக பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது.