பிரிட்டனில் நடைபெற்ற மென்சா நுண் அறிவாற்றல் போட்டியில், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் ஆகியோரை விட கூடுதல் மதிப்பெண் பெற்று இந்திய வம்சாவளி சிறுமி ராஜ்கௌரி பவார் (12) மகத்தான சாதனை படைத்துள்ளார்.
பிரிட்டனின் கிழக்குப் பகுதியான கேதோர்பி நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மென்ஸா அமைப்பில், கடந்த மாதம் ராஜ்கௌரி நுண் அறிவாற்றல் போட்டியில் பங்கேற்றார். இதில் அவர் 162 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார். மிகப்பெரிய கணித மேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இந்த தேர்வில் 160 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். ஐன்ஸ்டீனை விடவும் 2 மதிப்பெண்கள் கூடுதலாகப் பெற்று இந்திய வம்சாவளிச் சிறுமி சாதனை படைத்திருப்பது மகத்தானதாகக் கருதப்படுகிறது.
மென்ஸா அமைப்பு சார்பில் நடத்தப்படும் நுண்ணறிவு திறன் போட்டியில், மொழித் திறன், பொது அறிவு, நினைவுத் திறன், கணிதத் திறன், சிக்கலுக்கு தீர்வு காணும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். இந்தத் தேர்வில் வெற்றி பெற்று குறைந்தது 98 மதிப்பெண்கள் பெறுபவர்கள் மென்ஸா அமைப்பில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுவர். 140 மதிப்பெண் பெறுபவர்கள் ஜீனியஸ் என்று அழைக்கப்படுவர்.
இந்த அமைப்பில் உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இது பற்றி பேசிய ராஜ்கௌரி, இந்த போட்டிக்குச் செல்லும் போது சற்று பதற்றமாக இருந்தது. ஆனால் மிகச் சிறப்பான போட்டியை எதிர்கொண்டேன். உலகின் மிக உயரமான இடத்தில் இருப்பதை போல உணர்கிறேன், இது பற்றி விவரிக்க வார்த்தையே இல்லை. வெளிநாட்டில், இந்திய மண்ணுக்குப் பெருமை சேர்த்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.