நியூயார்க்: அமெரிக்காவில் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த தி ரிங்கிள் ப்ரோஸ் என்ற சர்க்கஸ் நிறுவனம், நியூயார்க்கில் நடத்தவுள்ள இறுதி நிகழ்ச்சியுடன் பிரியாவிடை பெறுகிறது.
அமெரிக்காவில் மிகவும் பழமைவாய்ந்த தி ரிங்கிள் ப்ரோஸ் சர்க்கஸ் நிறுவனம், பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில், பல்வேறு விலங்குகளை கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது. குறிப்பாக, யானைகளின் சாகசங்கள் குழந்தைகளைப் பெரிதும் கவர்ந்தன.
இந்நிலையில், இந்நிறுவனம் அண்மையில் நடத்தி வந்த காட்சிகளுக்கு பார்வையாளர்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால், நஷ்டத்தில் இயங்கி தத்தளித்து வந்தது.
இதனையடுத்து சர்க்கஸ் காட்சிகளை இம்மாதத்துடன் முடித்துக்கொள்வதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி, நியூயார்க்கின் லாங்க் ஐலாண்ட் தீவில் நாளை (மே 21) தனது கடைசி காட்சியை நடத்த தி ரிங்கிள் ப்ரோஸ் சர்க்கஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
உலகம் முழுவதும் 284 நகரங்களில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை தி ரிங்கிள் ப்ரோஸ் சர்க்கஸ் நிறுவனம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.