உலக அளவில் பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
சௌதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற இஸ்லாமியர்கள் வசிக்கும் நாட்டினர் அதிகம் நிறைந்த அரேப் - இஸ்லாம் - அமெரிக்கக் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய டிரம்ப் இதனைக் கூறினார்.
இந்தியா, ரஷ்யா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் என்று தெரிவித்தார்.
பயங்கரவாதத்துக்கு எதிராக தனது உரையைத் தொடங்கிய டிரம்ப், எந்த ஒரு நாடும் பயங்கரவாதக் குழுக்களுக்கு தங்களது மண்ணை இருப்பிடமாகச் செயல்பட விடக் கூடாது என்று பாகிஸ்தானை குறிப்பிட்டு சூசகமாகக் கூறினார்.
மேலும், அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட செப்டம்பர் 11 தாக்குதல், பாஸ்டன் தாக்குதல் உள்ளிட்டவற்றை நினைவு கூர்ந்த டிரம்ப், பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிராக உலக நாடுகள் போராட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தங்களது மண்ணில் பயங்கரவாதம் வேரூன்றுவதைத் தடுக்கும் பொறுப்பு அனைத்து நாடுகளுக்குமே உள்ளது. உங்கள் நாட்டில் பயங்கரவாதம் ஒழிந்தால் மட்டுமே, நாட்டின் வளர்ச்சி என்பது சாத்தியம். பயங்கரவாதிகளை வெளியேற்றுங்கள், உங்கள் இடத்தில் இருந்து அவர்களை விரட்டுங்கள், உங்கள் மதத்தில் இருந்து அவர்களை நீக்குங்கள், உங்கள் புனித பூமியில் இருந்து அவர்களை வெளியேற்றுங்கள், இந்த பூமியில் இருந்தே அவர்களை வெளியேற்றுங்கள் என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.