ஆப்கனில் தலிபான் பயங்கரவாதிகள் பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் மீது நிகழ்த்திய தாக்குதலில் 20 போலீஸார் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
ஜபூல் மாகாணம் ஷா ஜாய் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சோதனைச் சாவடிகளை குறிவைத்து ஞாயிற்றுக்கிழமை காலை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. கனரக மற்றும் இலகுரக ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகள் சோதனைச் சாவடிகளை குறிவைத்து பயங்கரமாக துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினர்.
இதில், 20 போலீஸார் உயிரிழந்தனர். மேலும், 15-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல்களுக்கு தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆப்கனில் பல்க் மாகாணம் மஸார்-இ-ஷெரீஃப் நகரில் கடந்த மாதம் ராணுவ முகாமுக்குள் நுழைந்த தலிபான் பயங்கரவாதிகள் 135 காவலர்களை கொன்று குவித்தனர்.
இந்த நிலையில், சோதனைச் சாவடிகளை குறிவைத்து மற்றொரு தாக்குதலை பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடி வரும் அமெரிக்கா, நேட்டோ மற்றும் ஆப்கன் படைகளுக்கு இந்த ஆண்டு மற்றொரு சவாலான ஆண்டாக இருக்கும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் ஏற்கெனவே எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.