இஸ்லாமாபாத்: சீக்கியர்களின் மதகுருவான குருநானக்கின் பிறந்த நாள் விழாவினை கொண்டாட பாகிஸ்தான் செல்ல விண்ணப்பித்த 2,600 இந்தியர்களுக்கு பாகிஸ்தான் விசா வழங்கியுள்ளது.
சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரும், அவர்களின் முதல் குருவுமான குருநானக் தற்போதைய பாகிஸ்தானில் உள்ள ஷேக்புரா மாவட்டத்தில் 1469-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் நாள் பிறந்தார். அவர் பிறந்தது ஏப்ரல் மாதமாக இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டின் கார்த்திகை மாத பெளர்ணமி தினம் குருநானக் ஜெயந்தியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளானது பாகிஸ்தானில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். அந்த சமயத்தில் உலகம் முழுவதும் உள்ள சீக்கிய இனத்தவர்கள் அங்கு வந்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.
இந்நிலையில் இவ்வாண்டு விழாவில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் செல்வதற்கு இந்தியர்கள் பலர் விசா கோரி விண்ணப்பித்து இருந்தனர். விண்ணப்பங்களை பரிசீலனை செய்த பாகிஸ்தான் தூதரகம் அவர்களில் 2,600 இந்தியர்களுக்கு விசா வழங்கி உள்ளது.
பாகிஸ்தானின் மதாசர்பின்மையை ஊக்குவிற்பதற்காவும், இரு நாட்டு மக்களுக்கு இடையே ஒரு தொடர்பை வலுப்படுத்தவும் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.