இஸ்லாமாபாத்: நான் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தீவிர ஆதரவாளன் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் வெளிப்படையாகத் தெரிவித்திருப்பது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீத்தால் உருவாக்கப்பட்ட பயங்கரவாத இயக்கம்தான் லஷ்கர் இ தொய்பா. இவ்வியக்கம் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து ஐநா சபை லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பட்டியலில் சேர்த்தது.
அத்துடன் பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற ஆணையின்படி ஹபீஸ் சயீத் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் வீட்டுக்காவலில் இருந்து ஹபீஸ் சயீத்தினை பாகிஸ்தான் விடுவித்தது. இதற்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் நான் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தீவிர ஆதரவாளன் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் வெளிப்படையாக தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பர்வேஸ் முஷரப் கூறியிருப்பதாவது:
நான் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தீவிர ஆதரவாளன். அந்த இயக்கமும் என்னை விரும்புகிறது என்பது எனக்குத் தெரியும். காஷ்மீர் விவகாரத்தில் ஹபீஸ் சயீத்தின் ஈடுபாட்டை நான் ஆதரிக்கிறேன். என்னுடைய ஆட்சியின் போதுதான் லஷ்கர் இ தொய்பா இயக்கம் தடை செய்யப்பட்டது. அப்போது நிலவிய சூழல் காரணமாகவே அவ்வியக்கம் தடை செய்யப்பட்டது.
உண்மையாக ஹபீஸ் சயீத் பற்றி அப்போது எனக்கு முழுமையாகத் தெரியாது. முழுமையாக அறிந்து இருந்தால், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை நான் அப்போது தடை செய்து இருக்க மாட்டேன்.
இவ்வாறு முஷரப் தெரிவித்தார்.