பாகிஸ்தானில் உள்ள தர்காவில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் பலியாகினர்.
பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணம், ஜல் மாக்ஸி பகுதியில் உள்ள ஃபதேபுர் தர்காவில் தற்கொலைத் தாக்குதல் நடந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன. நெரிசல் நிறைந்த நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. தர்காவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட காவலர்கள் அங்கு வருபவர்களை சோதனை செய்து உள்ளே நுழைய அனுமதித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சந்தேகத்துக்குரிய நபரைத் தீவிரமாக காவல் துறையினர் சோதனையிட்டனர். அப்போது அந்த நபர் தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இந்தத் தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் பலியாகினர். மேலும் இரு காவலர்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.
இது தற்கொலைத் தாக்குதல்தான் என்று உறுதி செய்த மாகாண அரசு செய்தித் தொடர்பாளர் அன்வருல் ஹக் கக்கர், சுற்றுப்புறத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு, காயமடைந்த அனைவருக்கும் சிகிச்சை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.