அமெரிக்கா மற்றும் தென் கொரியா கடற்படைகள் இணைந்து நடத்தும் மாபெரும் போர்ப் பயிற்சி அடுத்த வாரம் தொடங்கவுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க கடற்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்க ரொனால்ட் ரீகன் விமானம் தாங்கி கப்பல் உள்ளிட்ட போர்க் கப்பல்கள் தென் கொரிய கடற்படை கப்பல்களுடன் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளன.
இருநாடுகள் இணக்கமாக ஒருங்கிணைந்து செயல்படவும், உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவும், தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் இந்தப் போர்ப் பயிற்சி பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
ஜப்பான் கடல்பகுதி மற்றும் மஞ்சள் பகுதியில் நடைபெறவுள்ள இந்த போர்ப் பயிற்சி அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்ப் பயிற்சிக்கு முன்னோட்டமாக, அணுசக்தியில் இயங்கும் அமெரிக்காவின் மிச்சிகன் நீர்மூழ்கிக் கப்பல் தென்கொரியாவின் பூசான் நகரத்தை வந்தடைந்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் மற்றொரு நீர்மூழ்கிக் கப்பலான யு.எஸ்.எஸ். டூசான் தென்கொரியாவில் ஐந்துநாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு கிளம்பிய நிலையில், மிச்சிகன் நீர்மூழ்கிக் கப்பல், தென்கொரியா வந்துள்ளது கவனிக்கத்தக்கது.
வடகொரியாவுடனான மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அமெரிக்கா-தென்கொரியா இடையிலான போர்ப் பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.