பாகிஸ்தானுக்கு டிரம்ப் பாராட்டு
"அமெரிக்கா-பாகிஸ்தான் இடையே இப்போதுதான் உண்மையான உறவு தொடங்கியிருக்கிறது' என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பாரட்டினார்.
பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பின் பிடியில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த அமெரிக்க தம்பதி மற்றும் அவர்களின் குழந்தைகளை, பாகிஸ்தான் ராணுவம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வியாழக்கிழமை பத்திரமாக மீட்டது.
இதைப் பாராட்டும் விதமாக, டிரம்ப் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
இத்தனை ஆண்டுகளாக, அமெரிக்காவிடம் அதிக உரிமையுடன் பாகிஸ்தான் நடந்து கொண்டது. இப்போதுதான் அமெரிக்காவை ஒரு நாடாக பாகிஸ்தான் மதிக்கத் தொடங்கியுள்ளது. இதேபோல் மற்ற நாடுகளும் அமெரிக்காவை மதிக்கத் தொடங்கியுள்ளன.
அமெரிக்கா}பாகிஸ்தான் இடையே இப்போதுதான் உண்மையான உறவு தொடங்கியிருக்கிறது. இதற்காக, பாகிஸ்தான் நாட்டுத் தலைவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.
இதற்கு முன்பு, ஆப்கன் மற்றும் தெற்காசிய நாடுகள் மீதான கொள்கை குறித்து டிரம்ப் கடந்த ஆகஸ்ட் மாதம் விளக்கினார். அப்போது, பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தரும் பாகிஸ்தானுக்கு அவர் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், பயங்கரவாத அமைப்புகளை ஆதரிக்கும் போக்கை பாகிஸ்தான் தொடரந்தால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிருந்தார்.