இந்தியாவின் துரிதமான பொருளாதார வளர்ச்சி, இன்னும் 20 ஆண்டுகளுக்குத் தொடர்வதற்கான வாய்ப்புள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், இந்திய வம்சாவளியினரிடையே அவர் பேசியதாவது:
இன்னும் பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு, பொருளாதாரத்தில் இந்தியா துரித வளர்ச்சியைக் காண்பதற்கான சூழல் உள்ளது.
தற்போதைய மத்திய அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகள், உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் போன்ற காரணங்களால் இந்தச் சூழல் உருவாகியுள்ளது.
மந்த நிலையிலிருந்து உலகப் பொருளாதாரம் மீளும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது, மிகப் பெரிய சந்தையும், முதலீட்டு வாய்ப்புகளையும் கொண்ட இந்தியாவுக்கு சாதமான சூழலை ஏற்படுத்தும்.
மத்தியில் பாஜக கடந்த 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, கருப்புப் பணப் பொருளாதாரத்தைத் தொடர்ந்து அனுமதிப்பதா? வேண்டாமா? என்ற கேள்வி எழுந்தது. எனினும், கருப்புப் பணத்துக்கு எதிராக, உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்யும் மிகத் துணிச்சலான முடிவை அரசு எடுத்தது.
அந்த முடிவால், தாற்காலிகமாக சில பின்னடைவுகள் ஏற்படும் என்பது அரசுக்கு ஏற்கெனவே தெரியும். ஆனால், நீண்டகால நோக்கில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டுக்கு நன்மையே பயக்கும்.
மத்திய அரசின் நடவடிக்கைகள் காரணமாக, இந்தியாவில் ஏறத்தாழ எல்லோருக்குமே வங்கிக் கணக்குகள் உள்ளது. அவர்களது விவரங்கள் மின்னணு முறையில் சேகரிக்கப்பட்டு, அந்த வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்படுகின்றன.
இதன் மூலம், அனைவரது பணப் பரிமாற்றங்களும் அரசின் கண்காணிப்புக்குள் வரும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அரசுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் வரியிழப்பு தவிர்க்கப்படும். இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் காரணமாக, அமெரிக்காவுடனான வர்த்தக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார் ஜேட்லி.