நவாஸ் ஷெரீஃப் மீது குற்றச்சாட்டு பதிவு: மகள், மருமகன் மீதும் நீதிமன்றம் நடவடிக்கை

ஊழல் புகார் தொடர்பான வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நவாஸ் ஷெரீஃப் மீது குற்றச்சாட்டு பதிவு: மகள், மருமகன் மீதும் நீதிமன்றம் நடவடிக்கை

ஊழல் புகார் தொடர்பான வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் குடியிருப்பு வாங்கியது தொடர்பான வழக்கில் தற்போது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரது மகள் மரியம், மருமகன் முகமது சஃப்தர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
நவாஸ் ஷெரீஃப் அரசில் நிதி அமைச்சராக இருந்த இஷாக் தார் மீது ஏற்கெனவே குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
நவாஸ் ஷெரீஃபின் மனைவி குல்ஸூம் லண்டனில் புற்று நோய் சிகிச்சைக்குப் பிறகு உடல் நலம் தேறி வருகிறார். அவருக்குத் துணையாக லண்டனில் தங்கியுள்ளார் நவாஸ் ஷெரீஃப். எனவே நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குற்றச்சாட்டுப் பதிவின்போது அவர் ஆஜராகவில்லை. 
மகள் மரியம், அவரது கணவர் முகமது சஃப்தர் ஆகியோர் நீதிமன்றம் வந்திருந்தனர். நவாஸ் ஷெரீஃப் சார்பில் அவரது வழக்குரைஞர் மட்டுமே நீதிமன்றத்தில் இருந்தார்.
அவர்கள் மீது ஊழல் தடுப்பு ஆணையம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை மறுப்பதாக மூவரும் தெரிவித்ததாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, அவர்கள் மீதான குற்றச்சாட்டைப் பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். நவாஸ் ஆஜராகாத நிலையிலேயே அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நவாஸ் ஷெரீஃப் நாடு திரும்பியதும் அவர் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யலாம் என்று அவரது சார்பில் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்துவிட்டது.
முன்னதாக, பனாமா ஆவணங்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியாகின. பிரிட்டனில் நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினர் பெயரில் குடியிருப்புகள் இருப்பதாக அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து அவருக்கு எதிராக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. புகார்கள் குறித்து கூட்டுக் குழு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. லண்டனில் குடியிருப்பு வாங்கியது உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக விசாரணைக் குழு அறிக்கை அளித்தது. இதையடுத்து அவரைப் பதவி நீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 28-ஆம் தேதி உத்தரவிட்டது. நவாஸ் ஷெரீஃப் தனது பிரதமர் பதவியையும், எம்.பி. பதவியையும் ராஜிநாமா செய்தார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அவர் மீது மூன்று வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஒன்றோடு ஒன்று தொடர்புடைய அவற்றை இணைத்து ஒரே வழக்காக விசாரிக்கும்படி இஸ்லாமாபாத் ஊழல் தடுப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீஃப் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் வரை தற்போதைய விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று நவாஸின் வழக்குரைஞர் ஆயிஷா ஹமீத் கேட்டுக் கொண்டார்.
எனினும் அவர்களது வாதங்களை நிராகரித்து குற்றச்சாட்டு பதிவு செய்வதாக ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com