ஆஃப்கானிஸ்தானின் காபூல் மற்றும் மேற்கு மாகாணத்தில் உள்ள இருவேறு மசூதிகளில் பயங்கரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதலை வெள்ளிக்கிழமை நடத்தினர்.
இந்த கோர தாக்குதலில் இதுவரையில் மொத்தம் 70 பேர் உயிரிழந்தனர். சுமார் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த கொடூர தாக்குதல் சம்பவத்துக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தது. பயங்கரவாதத்தை அழிப்பது தொடர்பாக இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் வலியுறுத்தி வரும் வேளையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆஃப்கானிஸ்தான் அதிபர் மொஹம்மது அஷ்ரஃப் கானி கூறியதாவது:
இஸ்லாமின் புனிதத்தை பயங்கரவாதிகள் கெடுக்கின்றனர். மேலும் இஸ்லாம் தொடர்பான தவறான புரிதல்களை பரப்புகின்றனர். இவை அனைத்தும் உண்மைக்கு புறம்பானது.
மேலும் இஸ்லாமை பகடையாகப் பயன்படுத்தி மக்களிடத்தில் பயங்கரவாதிகள் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தானின் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.
பயங்கரவாதிகளின் இந்த எண்ணம் நிறைவேறாது. அவர்களுக்கு ஆஃப்கானிஸ்தான் அரசு நிச்சயம் பதிலடி கொடுக்கும் என்றார்.