நேபாளத்தில் உள்ள தாடிங் மாவட்டத்தில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் சனிக்கிழமை காலை 5 மணியளவில் விபத்து ஏற்பட்டது.
காத்மாண்டு நோக்கிச் சென்று கொண்டிருந்தப் பேருந்து தாடிங் நெடுஞ்சாலையில் இருந்து சரிந்து கட்பேசி எனுமிடத்தில் அமைந்துள்ள த்ரிஷுலி ஆற்றில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கி இதுவரையில் 31 பேர் உயிரிழந்தனர். ஆற்றில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட 20 உடல்களில் 12 பேரின் அடையாளம் தெரியவந்துள்ளது. அதில், மமதா தேவி தாகூர் என்ற இந்தியரும் அடங்குவார்.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த நேபாள காவல்துறை மீட்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இருப்பினும் ஆற்றில் இருந்து பேருந்தை மீட்கப் போராடி வருகின்றனர்.
பேருந்தில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை. இருப்பினும் 40 பேர் வரை அதில் இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
விபத்து குறித்து நேபாளம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இவ்விபத்து காரணமாக அப்பகுதியில் சோகம் நிலவுகிறது.