சியோல்: உலக நாடுகளின் பலத்த எதிப்புகளுக்கு மத்தியில் வடகொரியா மீண்டும் ஹைட்ரஜன் வெடிகுண்டு பரிசோதனையை நடத்தி உள்ளது.
கொரிய தீபகற்பத்தில் அண்டை நாடான தென்கொரியாவுக்கு அச்சுறுத்தலாக திகழும் வடகொரியா தனது எல்லையில் அதிக அளவில் படைகளை குவித்து வைத்திருப்பதுடன், அவ்வப்போது அணுகுண்டு, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
இதன் காரணமாக அமெரிக்காவும், ஐ.நாவும் வடகொரியா மீது பல்வேறு தடைகளை விதித்துள்ளது. குறிப்பாக டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் வடகொரியாவின் செயல்பாட்டிற்கு அமெரிக்கா தொடர்ந்து கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. சமீபத்தில் ஜப்பானிய கடல் பகுதிக்கு மேலாக வடகொரிய ஏவுகணை பறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இப்போது எதிர்ப்புகளுக்கு மத்தியில் வடகொரியா மீண்டும் அதிரடியாக ஹைட்ரஜன் வெடிகுண்டை பரிசோதனை செய்து உள்ளது. இது குறித்து, ' இன்று நடத்திய ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை மிகவும் நேர்த்தியான வெற்றியை பெற்றது' என அந்நாட்டு அரசு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த ஹைட்ரஜன் வெடிகுண்டை மிக நீண்ட தூர இலக்கை கொண்ட ஏவுகணையுடனும் இணைத்து செயல்படுத்த முடியும் எனவும் அந்நாடு அறிவித்துள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.