ஹூஸ்டன்: அமெரிக்காவை அதிர வைத்த ஹார்வி புயலில் படுமோசமாக பாதிக்கப்பட்ட ஹூஸ்டன் நகரில், வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவி ஷாலினி சிங் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கடந்த 27-ம் தேதி அன்று வீசிய ஹார்வி புயல் மற்றும் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக, அமெரிக்காவின் நான்காவது பெரிய நகரமான ஹூஸ்டன் நகரமே தண்ணீரில் மூழ்கி உள்ளது. லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். இந்த மழையானது கடந்த 1000 ஆண்டுகளில் அமெரிக்காவில் இல்லாத பெருமழை என்று கணிக்கப்படுகிறது. தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளை தொடர முடியவில்லை.
அதேநேரத்தில் ஹுஸ்டன் பல்கலையில் கிட்டத்தட்ட 200 இந்திய மாணவர்கள் சிக்கித் தவித்தனர். அவர்களில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த நிகில் பாட்டியா, மற்றும் ஷாலினி சிங் ஆகியோர் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் மீட்பு படையினரால் மீட்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் நிகில் பாட்டியா முதலில் சிகிச்சை பலனின்றி கடந்த சில தினங்களுக்கு முன் இறந்தார். இந்த நிலையில், மாணவி ஷாலினி சிங்கும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
25 வயதான ஷாலினி சிங், டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஏ&எம் பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவம் படித்து வந்தார்.கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஐடிஎஸ் மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவத்தில் பட்டம் பெற்ற ஷாலினி சிங், இரண்டு வருட மேல்படிப்புக்காக கடந்த மாதம்தான் அமெரிக்கா சென்றுள்ளார்.
முதன் முதலில் ஷாலினி சிங் வெள்ளத்தில் சிக்கியதாக தகவல் கிடைத்ததும் டெல்லியில் இருந்து ஷாலினியின் இளைய சகோதரர் மற்றும் தாய்வழி மாமா ஆகிய இருவரும் அமெரிக்கா வந்திருந்தனர். ஷாலினி சிங் உடல் மருத்துவ நடைமுறைகளுக்குப் பிறகு வரும் செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமை தகனம் செய்யப்படும் என்று தூதரக வட்டாரங்க. தெரிவிக்கின்றன