ஸியாமென்: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றபோது சிறப்பான கவனிப்பு அளித்தமைக்கு சீன அரசுக்கு நன்றி. தற்போது மியான்மருக்குப் புறப்படுகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்துள்ளார்.
இந்தியாவுடனான நல்லுறவை பலப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக இன்று மியான்மர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
சீனாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிராக தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையை ஆற்றினார். சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உட்பட பல உலகத் தலைவர்களை சந்தித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரிக்ஸ் மாநாடு நிறைவு பெற்றதை அடுத்து, சீனாவில் இருந்து மியான்மர் புறப்பட்டுச் சென்றுள்ள மோடி, அங்கு அந்நாட்டு அதிபர் ஹிடின் க்யாவுடன் இருநாட்டு உறவுகள் குறித்து பேசுகிறார். மாகாண கவுன்சிலர் ஆங் சான் சூ சியுடன் நாளை மோடி சந்திதுப் பேசவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புகளின்போது இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, வர்த்தகம் மற்றும் முதலீடு, கட்டமைப்பு மற்றும் எரிசக்தி, கலாசார துறைகள் குறித்து பேசப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.