லண்டனில் சுரங்க ரயிலில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் சிக்கி 29 பயணிகள் பலர் பலத்த காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என்று ஸ்காட்லாந்து யார்ட் போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது:
தென்மேற்கு லண்டனில் உள்ள பார்ஸன் கிரீன் சுரங்க ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.20 மணிக்கு ( இந்திய நேரப்படி பிற்பகல் 1.50 மணி) இந்த
குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.
சுரங்க ரயிலின் ஒரு பெட்டியில் பெரிய வெள்ளைநிற பக்கெட்டில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. அப்போது ஏற்பட்ட நெருப்பால் ரயில் பெட்டியில் இருந்த பயணிகள் 29 பேர் காயமடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பையடுத்து மெட்ரோ சுரங்க ரயில் சேவை தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்றார்.
இந்நிலையில், இந்த குண்டுவெடிப்புக்கு பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றது. சம்பவம் நடந்த 24 மணிநேரத்தில் பயங்கரவாதி ஒருவனை போலீஸார் கைது செய்தனர்.
இங்கிலாந்தின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள டோவர் என்ற இடத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞன் இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக சனிக்கிழமை கைது செய்யப்பட்டான்.
மேலும், இதுகுறித்து தீவிர தேடுதல் நடத்தி வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சமீபகாலங்களில் இங்கிலாந்தில் தொடர் பயங்கரவாத சம்பவங்கள் நடைபெறுவது வருத்தமளிப்பதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்தார்.