அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல மனநல மருத்துவர் அச்சுத ரெட்டி (57) என்பவரை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி படுகொலை செய்த நோயாளியை போலீஸார் கைது செய்தனர்.
இந்தப் படுகொலை அமெரிக்கவாழ் இந்தியர்கள் இடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: கான்சாஸ் மாகாணத்தின் கிழக்கு விசிதா நகரில் மனநல சிகிச்சை மையத்தை அச்சுத ரெட்டி நடத்தி வந்தார். அவரது மருத்துவமனைக்கு புதன்கிழமை மாலை 21 வயது மதிக்கத்தக்க இளைஞரும், அவரிடம் சிகிச்சை பெற்ற நபருமான உமர் ரஷீத் என்பவர் வந்தார். அவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.
அச்சுத ரெட்டி மீது ரஷீத் திடீரென சரமாரியாகத் தாக்கத் தொடங்கியபோது அந்த சிகிச்சை மையத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் வந்து மருத்துவரை வெளியேற்றியிருக்கிறார். அப்போது, வெளியே ஓடிவந்த மருத்துவரை விரட்டி பிடித்து தாம் வைத்திருந்த கத்தியைக் கொண்டு அவரை ரஷீத் குத்தினார். அவரது உடலில் பல இடங்களில் குத்தியதால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் உயிரிழந்தார்.
அதைத் தொடர்ந்து வெளியே நிறுத்தி வைத்திருந்த தனது காரில் ரஷீத் சென்று அமர்ந்தார். சட்டையில் ரத்தக் கறையுடன் அவர் அமர்ந்திருந்ததைப் பார்த்த ஒரு பாதுகாவலர் போலீஸாருக்குத் தகவல் அளித்தார். அதனடிப்படையில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். மருத்துவர் கொல்லப்பட்டதற்கான காரணம் இன்னமும் தெரியவில்லை. பிடிபட்ட இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.