மியான்மரில் இருந்து ரோஹிங்யா முஸ்லீம்கள் விரட்டப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் பல்வேறு இடங்களுக்கு அகதிகளாக குடியோறும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.
மியான்மரைச் சேர்ந்த சுமார் 4 லட்சம் ரோஹிங்யா முஸ்லீம்கள் வரை கடந்த ஆகஸ்ட் 25-ந் தேதி முதல் அடைக்கலம் புகுந்துள்ளனர். இவர்களுக்கு போதிய வசதிகளைச் செய்து கொடுப்பதாக வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹஸீனா தெரிவித்தார்.
எனவே, வங்கதேசம்-மியான்மர் எல்லையில் உள்ள காக்ஸ் பஸார் என்ற இடத்தில் சுமார் 2,000 ஏக்கரில் 14,000 குடியிருப்புகளை அடுத்த 10 நாட்களுக்குள் வங்கதேச ராணுவம் மற்றும் உலக அமைப்புகளின் உதவியுடன் ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், வங்கதேசத்தின் பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹஸீனா தலைமையிலான வங்கதேச அரசைத் தாக்கிப் பேசியுள்ளார். ரோஹிங்யா முஸ்லீம்கள் விவகாரத்தில் வங்கதேசப் பிரதமர் அரசியல் செய்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து தஸ்லிமா நஸ்ரின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:
ரோஹிங்யா முஸ்லீம்களுக்கு வங்கதேசம் அடைக்கலம் அளித்துள்ளது. இதுவே மியான்மரைச் சேர்ந்த அகதிகள் ஹிந்துக்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ, பௌத்தர்களாகவோ அல்லது இஸ்லாம் அற்ற வேற்று மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு இந்த வசதிகள் கிடைத்திருக்குமா? இவை எதுவும் மனிதாபிமான அடிப்படையில் நிகழந்தது இல்லை. எல்லாம் ஓட்டு அரசியல் என்றிருந்தது.