வடகொரியாவில் சனிக்கிழமை காலை 8:30 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டேர் அளவில் 3.4-ஆகப் பதிவானது.
வடகொரியா சமீபகாலமாக திடீர் ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் அண்டை நாடுகள் பதற்றமாக காணப்படுகிறது. மேலும், இதனால் போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருத்து வெளியாகிறது.
கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் 20 ஏவுகணைகளைச் சோதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ரசாயன குண்டுகள் மற்றும் ஹைட்ரஜன் குண்டுகளையும் தயாரித்து வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது.
வடகொரியாவின் இந்தத் தொடர் ஏவுகணைச் சோதனைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவும் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்து வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபை வடகொரியா மீது பொருளாதாரத் தடையை ஏற்படுத்தியது. மேலும், இதுபோன்று தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் வடகொரியாவை அழித்துவிடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார். ஆனால், வடகொரியா மீது ஏதேனும் நடந்தால் அப்போது உலகம் அழிவைச் சந்திக்க நேரிடும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் எச்சரித்தார்.
இந்நிலையில், சனிக்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மீண்டும் அணு ஆயுத சோதனை அல்லது ஹைட்ரஜன், ரசாயன வெடிகுண்டுச் சோதனைகளை வடகொரியா நடத்தியிருக்கும் என்ற சந்தேகம் தற்போது உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் முன்பு இதுபோன்று கொரிய தீபகர்பத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கங்களுக்கும் இதுபோன்ற ஏவுகணைச் சோதனைகளே காரணம் என பின்னர் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.