போர் கப்பலை தாக்கி அழிக்கும் புது ஏவுகணை: அரபிக்கடலில் பாகிஸ்தான் சோதனை
எதிரி நாட்டு போர் கப்பலை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் படைத்த புதிய ஏவுகணையை பாகிஸ்தான் கடற்படை சனிக்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதித்தது. இதன்மூலம் தங்கள் நாட்டு கடற்படையை மேம்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தது.
பாகிஸ்தான் அரசு அந்நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கத்தோடு புது ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதில் புது முயற்சியாக கடற்படையின் பலத்தை அதிகரிக்க திட்டமிட்டது.
எனவே பாகிஸ்தான் எல்லையில் உள்ள வடக்கு அரபிக் கடலில் இந்த சோதனையை நடத்தியது. பாகிஸ்தான் கடற்படை தளபதி மொஹம்மது சகவுல்லா மேற்பார்வையில் நடைபெற்றது.
அதில், ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்பட்ட இந்த புது ஏவுகணை இலக்கை வெற்றிகரமாகத் தாக்கி அழித்தது. எனவே இந்த ஏவுகணைச் சோதனை வெற்றியடைந்ததாக பாகிஸ்தான் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் அறிவித்தார்.
எந்த நேரத்திலும் போர் வந்தால் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் நிலையில் பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. இந்த வெற்றி பாகிஸ்தான் கடற்படையின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் திறமையை குறிக்கும் விதமாக உள்ளது. எங்கள் கடல் எல்லைகள் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது என பாகிஸ்தான் கடற்படைத் தளபதி மொஹம்மது சகவுல்லா கூறினார்.