மியான்மரின் ரெகினே மாகாணத்தில் காணாமல் போன 28 ஹிந்துக்களின் உடல்கள் அந்நாட்டு ராணுவத்தினரால் கண்டெடுக்கப்பட்டன.
ரெகினே மாகாணத்தில் ரோஹிங்கயா முஸ்லிம் தீவிரவாதிகள் ராணுவ முகாம் மீது கடந்த மாதம் நிகழ்த்திய தாக்குதலைத் தொடர்ந்து ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறையையடுத்து, 4 லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தனர்.
அதே சமயத்தில் ரெகினே மாகாணத்தில் வசித்து வந்த புத்த மதத்தைச் சேர்ந்தவர்களையும் ஹிந்துக்களையும் ரோஹிங்கயா முஸ்லிம் தீவிரவாதிகள் தாக்கியதாகத் தகவல்கள் வெளியாகின. தீவிரவாதிகளின் தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான ஹிந்துக்களும், புத்த மதத்தைச் சேர்ந்தவர்களும் மியான்மரின் பிற பகுதிகளுக்குச் சென்றனர்.
அவ்வாறு உயிர் தப்பி வந்த ஹிந்துக்கள் அளித்த விவரங்களின்படி மேலும் ஏராளமானவர்களைக் காணவில்லை என்று தெரிய வந்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில் அவர்களின் முந்தைய வசிப்பிடங்களிலும் காட்டுப் பகுதிகளிலும் மியான்மர் ராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தேடுதல் இடையே ஒரு கிராமத்தில் ஹிந்துக்கள் வசிப்பிடம் அருகே ஒரு குழியில் 28 சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இறந்தவர்களில் குழந்தைகள், பெண்கள் அடங்குவர்.
இதையடுத்து, ராணுவத்தினர் இதுபோல மேலும் புதை குழிகளில் சடலங்கள் இருக்கின்றனவா எனத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.