அமெரிக்க அதிபரின் இல்லமான வெள்ளை மாளிகை அருகே காரில் ஏராளமான ஆயுதங்களுடன் காரில் சுற்றித் திரிந்த முன்னாள் காவலரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:
டென்னஸி மாகாணம் கோலியர்வில் நகரத்தைச் சேர்ந்தவர் திமோதி ஜே. பேட்ஸ் (37). இவர் வெள்ளை மாளிகை அருகே பொது இடத்தில் சிறுநீர் கழித்தபோது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, அவரது காரை சோதனையிட்டதில், தோட்டாக்கள் நிரப்பப்பட்ட ஏகே-47 ரக துப்பாக்கிகள், ஒன்பது கைத் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுத குவியல் கைப்பற்றப்பட்டன. காவல் துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் மருத்துவ காரணங்களுக்காக கடந்த 2013-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன் பிறகு அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக ஆயுதங்களுடன் சுற்றிய திமோதி பேட்ஸுக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3.30 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர் உண்மையிலே மனநிலை சரியில்லாதவரா என்பது குறித்து கண்காணித்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.