பனாமா ஆவண ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு மிகவும் நெருக்கமான நிதியமைச்சர் இஷாக் தருக்கு எதிராக, ஊழல் விசாரணை நீதிமன்றம் புதன்கிழமை குற்றச்சாட்டு பதிவு செய்தது.
இந்த வழக்கில் நவாஸ் ஷெரீஃப் மீது வரும் அக். 2-ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று விசாரணை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவித்த நிலையில், தற்போது அவரது உதவியாளர் இஷாக் தருக்கு எதிரான குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.
எனினும், தன்மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து வாதிடவிருப்பதாக இஷாக் தர் தெரிவித்துள்ளார். பனாமா ஆவண கசிவைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீஃப் மீது ஊழல் புகார் எழுப்பப்பட்டது. அது குறித்த வழக்கில் அவரைத் தகுதி நீக்கம் செய்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் தனது பிரதமர் பதவியையும் எம்.பி. பதவியையும் ராஜிநாமா செய்தார்.
அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் 3 வழக்குகளை தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு பதிவு செய்துள்ளது.
தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கத்தோடு சுமத்தப்பட்டவை என்றும் தான் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்றும் நவாஸ் ஷெரீஃப் கூறி வருகிறார்.