ஏடென்: ஏமனில் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடி வரும் கிளர்ச்சியாளர்கள் மீதான விமானப்படை தாக்குதலில் 16 பேர் பலியாகினர்.
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இனக்குழுவினர் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஈரான் நாட்டின் ஆதரவும் உள்ளது. அவர்கள் மீது அரசுப் படைகளும் அண்டை நாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகளும் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கத்தில் உள்ள ஹொடைடா மாகாணத்துக்குட்பட்ட அல்-ஹாலி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத போர் விமானங்கள் திங்களன்று இரண்டு வான்வழி தாக்குதல்களில் ஈடுபட்டன. இதில் 16 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடந்தனர்.
சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்த கொடூர தாக்குதலில் பெண்களும், குழந்தைகளும் அதிக அளவில் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.