இலங்கை வடக்கு மாகாண முதல்வர் பதவிக்கு சி.வி. விக்னேஸ்வரனை முன்னிறுத்தவோ, ஆதரிக்கவோ மாட்டோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் தலைவர்களுக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையே நிலவி வரும் கருத்து மோதல்களே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை வடக்கு மாகாண தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் விக்னேஸ்வரன் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர் மாகாணத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
அதன் பின்னர், கூட்டமைப்பின் முக்கியத் தலைவர்கள் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான அரசுக்கு பல்வேறு விவகாரங்களில் ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினர். மேலும், சிங்கள ஆட்சியாளர்களுடன் மென்மையான போக்கையும் அவர்கள் கடைப்பிடித்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் இந்த நடவடிக்கைக்கு அதிருப்தி வெளிப்படுத்திய விக்னேஸ்வரன், அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டார். இந்தச் சூழலில், நிகழாண்டு இறுதியில் நடைபெறவுள்ள இலங்கை மாகாணத் தேர்தலில் விக்னேஸ்வரன் மீண்டும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாரா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி. சுமந்திரன், 'விக்னேஸ்வரனை மீண்டும் ஆதரிக்கும் திட்டம் இல்லை' என்றார். இதனிடையே, கூட்டமைப்பின் முதல்வர் வேட்பாளாராக மாவை சேனாதிராஜா முன்னிறுத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.