ஈரானில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த மூவர் உள்ளிட்ட ஆறு பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ ஊடகமான ஐஆர்என்ஏ தெரிவித்ததாவது:
சிஸ்தன்-பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் ஜகிதானில் செவ்வாய்க்கிழமை காலை இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. பாகிஸ்தான் உடனான ஈரான் எல்லையில் அமைந்துள்ள மாகாணம் இதுவாகும்.
பாகிஸ்தான் பகுதியிலிருந்து வந்த பயங்கரவாதிகள் மிர்ஜாவேஸ் பகுதியில் உள்ள பாதுகாப்பு படை அலுவலகங்களை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அதிரடிப் படை வீரர்களும் பதில் தாக்குதல் நிகழ்த்தினர். இருதரப்புக்கும் இடையை நடந்த சண்டையில், பாதுகாப்பு படையைச் சேர்ந்த மூவரும், பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்தனர் என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
ஜெய்ஷல்-அதுல் பயங்கரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் உதவி செய்து வருவதாக ஈரான் ஏற்கெனவே குற்றம்சாட்டி வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு அல்காய்தாவுடன்இணைந்து ஈரான்-பாகிஸ்தான் எல்லை மாகாணமான சிஸ்தன்-பலுசிஸ்தான் பகுதியில் அதிக அளவில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.