இந்தோனேசியாவில் எண்ணெய் கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலியாகினர். அத்துடன் 12-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
அந்த நாட்டின், பண்டா ஏக் மாகாணத்தில் உள்ள அந்த எண்ணெய் கிணறு சட்டத்துக்குப் புறம்பாக இயங்கி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தோனேசிய நேரப்படி அதிகாலை 1.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அருகில் இருந்த மூன்று வீடுகளுக்கும் தீ பரவியது.
பனைமர உயரத்தையும் தாண்டி சுமார் 230 அடி உயரத்துக்கு தீ கொழுந்து விட்டு எரிந்துள்ளது.
அப்பகுதியில் உள்ள மக்கள் பிழைப்புக்காக, சட்ட விரேதமாக எண்ணெய் சேகரிப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம் என்றும், அவ்வாறு எண்ணெய் எடுத்தபோது தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
அங்குள்ள மக்கள் பெரும்பாலும் புகைப்பழக்கம் உடையவர்கள் என்பதால் சிகரெட் காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ-யின் வேகம் மிக அதிகமாக இருப்பதால், அதைக் கட்டுப்படுத்துவதில் மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.