சியோல்: வடகொரியாவின் செயல்பாட்டில் உள்ள அணு ஆயுத பரிசோதனைத் தளங்களை வரும் மே மாதத்தில் அந்நாடு மூட உள்ளதாக தென்கொரியா தகவல் தெரிவித்துள்ளது.
வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் ஆகிய ஒருவரும் தென்கொரிய பகுதியில் அமைந்துள்ள பன்முஞ்சோமில் நடந்த உச்சிமாநாட்டில் சந்தித்துப்பேசினர்.
அதை தொடர்ந்து இருவரும் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றவும், கொரியப் போரை முறைப்படி முடிவுக்கு கொண்டு வருவதற்காக பணியாற்ற இருப்பதாக அறிவித்தனர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது இரு நாடுகள் இடையேயான உறவுகளை பலப்படுத்துதல், கொரிய தீபகற்ப பகுதியில் அமைதி, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை கைவிடுதல் மற்றும் பரஸ்பர விஷயங்களில் இரு தரப்பினரும் நேர்மையாகவும், திறந்த மனதுடனும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் வடகொரியாவின் செயல்பாட்டில் உள்ள அணு ஆயுத பரிசோதனைத் தளங்களை வரும் மே மாதத்தில் அந்நாடு மூட உள்ளதாக தென்கொரியா தகவல் தெரிவித்துள்ளது.
இதுபற்றி தென் கொரிய அதிபர் மூனின் அலுவலக செய்தி தொடர்பு அதிகாரி செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில் கடந்த வெள்ளி கிழமை நடந்த உச்சி மாநாட்டில் அணு ஆயுத பரிசோதனை தளங்கள் அடுத்த மாதத்தில் மூடப்படும் என வட கொரிய அதிபர் கிம் கூறினார் என தகவல் தெரிவித்ததாக கூறினார்.