சீனாவில் அனுமதியின்றி கட்டப்பட்ட மசூதியை இடிக்கும் அதிகாரிகளின் முடிவு, போராட்டத்தின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
சீனாவில் உய்கர் இன முஸ்லிம்களுக்கு அடுத்தபடியாக, ஹுய் இன முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அந்த நாட்டின் நிங்ஸியா ஹுய் தன்னாட்சிப் பகுதியில், வேய்ஷு என்ற நகரில் அந்த இனத்தவர் மசூதி ஒன்றைக் கட்டியுள்ளனர். புதிதாகக் கட்டப்பட்டுள்ள அந்த மசூதி, முறையான அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறி, அதனை இடிக்க உள்ளாட்சி நிர்வாக அதிகரிகள் முடிவு செய்தனர்.
சீனாவை மதமயமாக்குவதிலிருந்து தடுப்பதற்காக, அந்த நாட்டு அரசு அதிகாரிகள் இதுபோன்று பல்வேறு கட்டடங்களையும், மதச் சின்னங்களையும் இடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வேய்ஷூ மசூதியையும் அதே காரணத்துக்காகத்தான் இடித்துத் தள்ள அதிகாரிகள் முடிவு செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில், அந்த மசூதியை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்கணக்கான ஹுய் இன முஸ்லிம்கள் அந்த மசூதியில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
அதிகாரிகள் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர்கள் அந்த இடத்தை விட்டு நகராததால், மசூதியை இடிக்கும் முடிவை அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். மேலும், மாற்று இடத்தில் புதிய மசூதி கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் வரை, அந்த மசூதியை இடிக்க மாட்டோம் என்றும் அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். சீனாவில் மத நம்பிக்கைகள் பரவலாவதைத் தடுப்பதற்காக அரசு மேற்கொள்ளும் முயற்சியை எதிர்த்து, முதல் முறையாக நடைபெற்றுள்ள மிகப் பெரிய போராட்டம் இது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.