சூரியனைத் "தொட' புறப்பட்டது நாஸா விண்கலம்!

இதுவரை இல்லாத நெருக்கத்தில் சென்று சூரியனில் ஆய்வு மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட "பார்க்கர்' விண்கலத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக
பார்க்கர் விண்கலத்துடன் விண்ணில் சீறிப் பாயும் டெல்டா 4 ராக்கெட்
பார்க்கர் விண்கலத்துடன் விண்ணில் சீறிப் பாயும் டெல்டா 4 ராக்கெட்

இதுவரை இல்லாத நெருக்கத்தில் சென்று சூரியனில் ஆய்வு மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட "பார்க்கர்' விண்கலத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

7 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த ஆய்வில், பார்க்கர் விண்கலம் சூரியனை "தொட்டது' என்றே சொல்லுமளவுக்கு நெருக்கத்தில் செல்லும் என்று நாஸா விஞ்ஞானிகள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.
மனிதனால் உருவாக்கப்பட்டு, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு அதிவேகத்தில் பாய்ந்து செல்லும் பொருள் என்ற சிறப்பும் பார்க்கர் விண்கலத்துக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமன்றி, உயிரோடிருக்கும் விஞ்ஞானியின் பெயர் சூட்டப்பட்டுள்ள முதல் விண்வெளி ஆய்வுக் கலம் என்பதும் பார்க்கரின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
சூரியக் காற்று குறித்த உண்மைகளை கடந்த 1958-ஆம் ஆண்டு கண்டறிந்து சொன்ன விஞ்ஞானி யுஜீன் பார்க்கரின் (91) பெயர் இந்த விண்கலத்துக்குச் சூட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

சூரியனில் இதுவரை கண்டறியப்படாத உண்மைகளைக் கண்டறியும் முயற்சியாக, அதற்கு மிக நெருக்கத்தில் விண்கலத்தை அனுப்பி ஆய்வு செய்யும் திட்டத்தை நாஸா கடந்த 2009-ஆம் ஆண்டு அறிவித்தது.
அந்த விண்கலத்தை மேரிலாண்ட் மாகாணம், பால்ட்டிமோர் நகரிலுள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழத்தின் இயற்பியல் 
ஆய்வகம் வடிவமைத்தது.

கடந்த 2015-ஆம் ஆண்டே இந்த விண்கலத்தை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டாலும், பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

இந்தச் சூழலில், ஃப்ளோரிடா மாகாணம், கேப் கேனவரல் பகுதியிலுள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து சக்தி வாய்ந்த அலையன்ஸ் டெல்ட்டா 4 வகை கனரக ராக்கெட்கள் மூலம் பார்க்கர் விண்கலத்தை கடந்த சனிக்கிழமை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது.

எனினும், தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக அந்தத் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.31 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 1.01 மணிக்கு) பார்க்கர் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

அந்த விண்கலம், தனது வட்டப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாகவும், சூரியனைத் "தொடு'வதற்கான தனது பயணத்தை அது சுயமாகவே தொடங்கியதாகவும் தனது வலைதளத்தில் நாஸா தெரிவித்துள்ளது.

சூரியனின் காற்றுமண்டலத்துக்குள் முதல் முறையாக நுழைந்து ஆய்வு மேற்கொள்ளும் நோக்கில் பார்க்கர் விண்கலம் அனுப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில்தான், பூமியில் தாக்கங்களை ஏற்படுத்தும் பல்வேறு உண்மைகள் பொதிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தப் பகுதியில் பார்க்கர் விண்கலம் மேற்கொள்ளும் ஆய்வு, சூரியனைக் குறித்தும், பிரபஞ்சத்தைக் குறித்தும் பல மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7 ஆண்டுகளில் இந்த விண்கலம் சூரியனை 24 முறை நீள்வட்டப்பாதையில் வலம் வரும் எனவும், மிகவும் அதிகபட்சமாக சூரியனுக்கு 61.2 லட்சம் கி.மீ. நெருக்கத்தில் கடந்து செல்லும் எனவும் கூறப்படுகிறது.

இன்னும் 6 வாரங்களில் வெள்ளி கிரகத்தைக் கடந்து செல்லும் பார்க்கர் விண்கலம், அடுத்த 6 வாரங்களில் சூரியனை முதல் முறையாக சுற்றிக் கடக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நொடிக்கு 190 கி.மீ. வேகத்தில் பாய்ந்து செல்லும் இந்த விண்கலம்தான், மனிதர்களால் உருவாக்கப்பட்டதிலேயே மிக அதிக வேகத்தில் பயணிக்கும் பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com