காபூல்: வடக்கு ஆப்கானிஸ்தானில் பேருந்தில் சென்ற நூற்றுக்கும் மேற்பட்டோரை தலிபான்கள் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்ற சம்பவத்தை அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.
பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் தலிபான்களின் பிடியில் பிணைக் கைதிகளாக சிக்கியிருப்பது அந்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட்ட குந்தூஷ் மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி தலிபான்களிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
சமீபத்தில் ஆப்கனில் தலிபான்களின் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. கடந்த சில மாதங்களில் பயங்கர வெடிகுண்டுகளை வெடித்து பலர் உயிரிழக்கக் காரணமாக இருந்த தலிபான்கள் தற்போது பிணைக் கைதிகளாக நூற்றுக்கணக்கானோரை பிடித்துச் சென்றிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிணைக் கைதிகளை மீட்கும் பணியில் மதத் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.