இந்தோனேசியாவில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்த நாட்டின் லொம்போக் தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாகப் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லொம்போக்கின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பெலான்டிங் நகருக்கு மேற்கு-வடமேற்குத் திசையில், 7 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கம் காரணமாக உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. எனினும், நில அதிர்வால் பீதியடைந்த மக்கள் தங்கள் இருந்த கட்டடங்களை விட்டு சாலைகளுக்கு ஓடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுடோப்போ பூர்வோ கூறியதாவது:
ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம், மக்களை பீதியடைச் செய்துள்ளது.
அதன் காரணமாக அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு திறந்த வெளிகளை நோக்கி ஓடினர்.
இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
எரிமலை வெடிப்பின் காரணமாக பல மலைச் சுற்றுலா ஆர்வலர்கள் கடந்த ஜூலை மாதம் சிக்கிக் கொண்ட பகுதியில், இந்த நிலநடுக்கத்தால் நிலச்சரிவு ஏற்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்றார் அவர்.
இந்தோனேசியாவில் இரு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 460-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.