விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைக்கு மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் உதவி செய்ததாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று, அங்கு வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவிக்க வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் விக்ரமசிங்க கையெழுத்திட்டார். இதையடுத்து அவர் கூறியதாவது:
சிறந்த பிரதமர்களில் அவரும் ஒருவர். இலங்கையின் உண்மையான நண்பர் அவர். இக்கட்டான காலக்கட்டத்திலும் இலங்கைக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
இலங்கை பிரதமராக முன்பு நான் பதவி வகித்தபோது, விடுதலைப்புலிகள் மிகவும் பலமிக்கவர்களாக இருந்தனர். அக்காலக்கட்டத்தில், இலங்கை அரசின் பொருளாதாரம் பலகீனமாக இருந்தது. அப்போது இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கு வாஜ்பாய் உதவினார். இலங்கை ராணுவத்துக்கான பயிற்சியையும் அவர் நீட்டித்தார்.
கடற்புலிகளை இலங்கையால் தடுத்து நிறுத்த முடிந்தது எனில், அதற்கு வாஜ்பாயின் உதவிதான் காரணமாகும்.
வாஜ்பாயை கடந்த 1975ஆம் ஆண்டில் முதன்முதலில் சந்தித்தேன். பிறகு 1977ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக வாஜ்பாய் இருந்தபோது, இலங்கை வெளியுறவுத் துறை இணையமைச்சராக நான் இருந்தேன்.
இந்திய பிரதமராக வாஜ்பாய் பதவியேற்ற பிறகு, தனது பிரத்யேக தொலைபேசி எண்ணை எனக்கு தந்தார். எங்கள் இருவரிடையேயான நட்பு தொடர்ந்தது என்றார் விக்ரமசிங்க.
இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையே சுமார் 30 ஆண்டுகள் நடைபெற்ற உள்நாட்டுப் போர் கடந்த 2009ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. அந்தப் போரில் விடுதலைப்புலிகள் அமைப்பை இலங்கை ராணுவம் முழுவதும் தோற்கடித்தது.