ஸ்டிராஸ்போர்க்: பிரான்சின் ஸ்டிராஸ்போர்க் நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் ஸ்டிராஸ்போர்க் நகரில் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்புச் சந்தை அமைக்கப்பட்டிருந்தது. மக்கள் நெருக்கடி மிகுந்த அந்த சாலையில் உள்ளூர் நேரப்பபடி செவ்வாய் இரவு மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி ஏந்தியபடி வந்துள்ளார்.
அவர் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மக்களை நோக்கி திடீரென்று துப்பாக்கியால் தாறுமாறாகச் சுட்டுள்ளார். இதனால் அச்சமடைந்த மக்கள் பாதுகாப்பு தேடி தப்பித்து ஓடினர்.அருகில் இருந்த கட்டடங்களுக்குள் புகுந்து தஞ்சம் அடைந்தனர்.
இந்த கொலைவெறித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர். அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த ராணுவ வீரர்கள் மர்ம நபர் மீது துப்பாக்கியால் சுட்டனர். ஆனால் காயமடைந்த அந்த நபர் போலீசாரிடம் சிக்காமல் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இந்த சம்பவத்தினை அடுத்து குறிப்பிட்ட பகுதிகள் நேற்றிரவு சீல் வைக்கப்பட்டன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.