கருக்கலைப்புகக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதற்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க மசோதா, அயர்லாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கத்தோலிக்க மத நம்பிக்கை கொண்டவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அயர்லாந்தில், கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல் மருத்துவர் சவீதா என்பவர் கருச்சிதைவு காரணமாக ஏற்பட்ட பிரச்னைகளால் கடந்த 2012-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் கருக்கலைப்புத் தடைச் சட்டத்துக்கு எதிரான மிகப் பெரிய சர்ச்சையை அயர்லாந்தில் ஏற்படுத்தியது. அதையடுத்து, இதுதொடர்பாக கடந்த மே மாதம் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில், கருக்கலைப்புக்கு அனுமதி வழங்குவதற்கு 66.4 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்தச் சூழலில், கருக்கலைப்புக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் வகையில், அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்வதற்கான மசோதாவை அந்த நாட்டு நாடாளுமன்றம் வியாழக்கிழமை நிறைவேற்றியது.