இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் தனது இரண்டாவது மனைவியைச் சுட்டு விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் திட்டச் செயல்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வருபவர் மிர் கஜார்கான் பிஜரானி. இவரது இரண்டாவது மனைவி பரீஹா ரசாக் ஹாரூன் இவர்கள் இருவரும் கராச்சி நகரில் ஆடம்பர பங்களா ஒன்றில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் வியாழன் மதியம் அன்று கராச்சி பங்களாவில் உள்ள அறை ஒன்றில் மிர் கஜார்கான் பிஜரானி. மற்றும் பரீஹா ரசாக் ஹாரூன் இருவரும் சோபாவில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இது குறித்து தகவல் கிடைத்தது விரைந்து சென்ற போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிஜரானியின் தலையில் ஒரு குண்டும், அவரது மனைவி பரீஹாவின் அடிவயிற்றில் 2 குண்டுகளும், தலையில் ஒரு குண்டும் பாய்ந்திருந்ததும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. எனவே பிஜரானி முதலில் மனைவியை சுட்டுக்கொன்று விட்டு, அதன்பின்னர் அதே துப்பாக்கியால் தானும் சுட்டுக்கொண்டு உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது
அந்த பங்களாவின் சிசிடிவி கேமரா பதிவுகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வரும் போலீசார், அங்கு வேலை பார்த்து வந்த 6 பேரை அழைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.