கொழும்பு: மாலத்தீவில் செய்யப்பட்டுள்ள அவசர நிலைப் பிரகடனம் மூலம் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையைத் தீர்க்க இந்தியா உதவ வேண்டும் என்று மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகம்மது நஷீத் தெரிவித்துள்ளார்.
சிரிய நாடான மாலத்தீவில் அதிபராக அப்துல்லா யாமீன் உள்ளார். அவருடைய அரசுக்கு எதிராக ஆளும் கட்சியைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள். மேலும் அவர்கள் எதிர்க்கட்சிக்கு ஆதரவு அளித்ததன் காரணமாக அரசியல் ஸ்திரமற்ற தன்மை உண்டானது. இதையடுத்து ஆட்சி கவிழும் அபாயத்தை தவிர்க்க 12 எம்.பி.க்களையும் அதிபர் அப்துல்லா யாமீன் உடனடியாக தகுதி நீக்கம் செய்தார்.
இதனிடையே 12 எம்.பி.க்களின் முறையீட்டினை ஏற்ற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் எம்.பி.க்களின் தகுதிநீக்க உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனை ஏற்க மறுத்த அப்துல்லா யாமீன் மாலத்தீவில் 15 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பித்தார். இதனால் அங்கு தொடர்ந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.
அவசர நிலையின் அதிரடியாக மாலத்தீவு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலி ஹமீத் மற்றும் மேலும் ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி என இரு நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர். அதேபோல், முன்னாள் அதிபர் மமூன் அப்துல் கயாமும் கைது செய்யப்பட்டுள்ளார். அதிபர் உத்தரவின் பேரில் இந்த கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா விரைந்து செயல்பட்டு மாலத்தீவில் தற்போது உள்ள அரசியல் நெருக்கடியான நிலையை தீர்க்க உதவ வேண்டும் என்று இலங்கையில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள முன்னாள் அதிபர் முகம்மது நஷீத் தெரிவித்துள்ளார். அத்துடன் நீதிமம்ன்ற உத்தரவுப்படி உடனடியாக அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அதிபர் யாமீனுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.