அமெரிக்காவிலுள்ள இரு அங்காடிகளில், இந்திய வம்சாவளிப் பணியாளர்கள் மீது இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்; மற்றொருவர் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம், ஃபிளாய்ட் பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் மேலாளராக பணியாற்றி வந்த பரம்ஜித் சிங்கை (44) நோக்கி லாமர் ரஷாத் நிக்கல்ஸன் என்ற 28 வயது இளைஞர் செவ்வாய்க்கிழமை இரவு பல முறை துப்பாக்கியால் சுட்டார்.
இதில், சம்பவ இடத்திலேயே பரம்ஜித் சிங் (படம்) உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து, 10 நிமிடங்களில் அருகிலிருந்த மற்றொரு அங்காடிக்கும் சென்ற நிக்கல்ஸன், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த பார்த்தி படேல் (30) என்பவரை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டார். மேலும், அங்கிருந்த பணத்தையும் நிக்கலஸன் திருடிச் சென்றார்.
துப்பாக்கியால் சுட்டதில் பார்த்தி படேல் பலத்த காயமடைந்து, ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
சுட்டுக் கொல்லப்பட்ட பரம்ஜித் சிங்குக்கு அருகே நின்றிருந்த மற்றொரு பெண் பணியாளருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, நிக்கல்ஸனைக் கைது செய்துள்ள போலீஸார் அவர் மீது கொலை, கொள்ளை, வன்முறை, குற்றச் செயலில் ஈடுபடும்போது துப்பாக்கி வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.