குளிர்கால ஒலிம்பிக்: தென் கொரியா வந்தார் வட கொரிய அதிபரின் சகோதரி

குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்ககேற்பதற்காக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னின் இளைய சகோதரி ஜிம் யோ-ஜோங் தென் கொரியாவை வெள்ளிக்கிழமை வந்தடைந்தார்.
தென் கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய கிம் யோ}ஜோங்.
தென் கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய கிம் யோ}ஜோங்.

குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்ககேற்பதற்காக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னின் இளைய சகோதரி ஜிம் யோ-ஜோங் தென் கொரியாவை வெள்ளிக்கிழமை வந்தடைந்தார்.
கொரியப் போருக்குப் பிறகு, வட கொரியாவை ஆளும் கிம் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் தென் கொரியாவுக்கு வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் உலகப் போரின் முடிவில், கொரிய தீபகற்பத்தில் சோவியத் யூனியன் வசமிருந்த பகுதி வட கொரியா எனவும், அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி தென் கொரியா எனவும் பிரிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, கிம் இல்-சங் தலைமையில் வட கொரிய ஆட்சியை ஒப்படைத்துவிட்டு ரஷியப் படையினர் 1948-ஆம் ஆண்டு அந்த நாட்டைவிட்டு வெளியேறினர்.
அதிலிருந்து, கிம் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் வட கொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகின்றனர். கடந்த 1950-ஆம் ஆண்டு முதல், 1953-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற கொரியப் போருக்குப் பிறகு வட - தென் கொரிய நாடுகளிடையே கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. அதிலிருந்து வட கொரிய ஆட்சியாளர் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் தென் கொரியாவுக்கு வந்ததில்லை.
இந்தச் சூழலில், தற்போதைய வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னின் இளைய சகோதரி ஜிம் யோ-ஜோங் தென் கொரியாவுக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்தார்.
அந்த நாட்டில் நடைபெறும் குளிர் கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்பதாக, வட கொரிய அதிகாரிகளுடன் அவர் தென் கொரியாவுக்கு வந்தார்.
அதிபர் கிம் ஜோங்-உன் பயன்படுத்தும் விமானத்தில் தென் கொரியா வந்துள்ள அவர், அந்த நாட்டில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, இரு நாடுகளிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கிம் யோ ஜோங்குடன், வட கொரியாவின் கெளரவத் தலைவர் கிம் யோங்-நாமும் தென் கொரியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணைச் சோதனைகளையும், அணு குண்டு சோதனைகளையும் தொடர்ந்து நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் கடும் போர்ப் பதற்றம் நிலவி வந்தது.
இந்த நிலையில், தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் தங்கள் நாட்டு வீரர்களை அனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தார்.
மேலும், கடந்த டிசம்பர் 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக இரு நாடுகளுக்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. அந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வட - தென் கொரியா நாடுகள் இடையே பிணக்கம் குறைந்த சூழலில், அதிபர் கிம் ஜோங்-உன்னின் தங்கை கிம் யோ-ஜோங் தென் கொரியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com