தைவானில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: செவ்வாய்க்கிழமை இரவு ரிக்டர் அளவு கோலில் 6.4 அலகுகளாகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியான மேலும் மூவரது உடல்களை மீட்புக் குழுவினர் வெள்ளிக்கிழமை கண்டெடுத்தனர். இதையடுத்து, நிலநடுக்க பலி எண்ணிக்கை 12-ஆக அதிகரித்துள்ளது.
புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஹுவேலியனை மையப் பகுதியாகக் கொண்ட ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் வீடுகள், தங்கும் விடுதிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. மேலும், பல கட்டங்கள் 50டிகிரி கோணத்தில் சாய்ந்து சரிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளன.
நிலநடுக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு விபத்துக்குள்ளான பகுதிகள் குறுகிய பாதைகளைக் கொண்டவை என்பதால் தீயணைப்பு துறையினர் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கே மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் சிரமமான காரியமாக உள்ளது. இருப்பினும், கடினமாக போராடி கனடாவைச் சேர்ந்த தம்பதியரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் அவர்கள் முன்னரே இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த உடல்கள் இறுதி சடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.