பாகிஸ்தானின் பிரபல மனித உரிமை வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான அஸ்மா ஜஹாங்கீர் (66) ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் அதீல் ராஜா கூறியதாவது:
அஸ்மா ஜஹாங்கீருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் லாகூரில் உள்ள ஹமீது லத்தீப் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது. அவரின் இறப்பு பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு என்றார் அவர். லாகூரில் கடந்த 1952 ஜனவரி மாதம் பிறந்த அஸ்மா ஜஹாங்கீர், பாகிஸ்தானில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதில் முக்கியமானவராகத் திகழ்ந்தார்.
பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் 1978-ஆம் ஆண்டு எல்.எல்.பி. பட்டம் பெற்ற அவர், உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார். சர்வாதிகாரியான ஜியாவுல் ஹக்குக்கு எதிராக கடந்த 1983-ஆம் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று சிறைக்கும் சென்றவர்.