பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் புதன்கிழமை நடத்திய தாக்குதலில் 4 துணை ராணுவப் படையினர் உயிரிழந்தனர்.
எல்லைப் படையைச் சேர்ந்த அந்த 4 பேரும், குவெட்டா நகர சாலைகளில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
இதுகுறித்து குவெட்டா நகர எல்லைப் படை துணைத் தலைவர் ரஸாக் சீமா கூறியதாவது:
சாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் படையினரின் வாகனத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தினர். இதில் 4 வீரர்கள் உயிரிழந்தனர்.
எல்லைப் படையினரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் ஒருங்கிணைந்து இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர் என்றார் அவர். இந்தத் தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதிகள் இந்த ஆண்டு நிகழ்த்திய பல தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும். கடந்த மாதம் குவெட்டாவில் வெடிகுண்டு பொருத்தப்பட்ட மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த தற்கொலைப் படை பயங்கரவாதி, அதனை போலீஸ் வாகனத்தின் மீது மோதி வெடிக்கச் செய்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.