நேபாள அதிபர் வித்யா தேவி பண்டாரி, பிரதமர் ஷேர் பகதூர் தியூபா ஆகியோரை இந்திய ராணுவத் தலைமைத் தளபதி விபின் ராவத் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது, இரு நாட்டு ராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். விபின் ராவத், மூன்று நாள் பயணமாக, கடந்த திங்கள்கிழமை நேபாளம் வந்தார். தலைநகர் காத்மாண்டில் நேபாள ராணுவத் தலைமைத் தளபதி ராஜேந்திர செத்ரியைச் சந்தித்துப் பேசினார்.
அதைத் தொடர்ந்து, நேபாள ராணுவ தின நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராக விபின் ராவத் கலந்து கொண்டார். பின்னர், நேபாள ராணுவத்தின் மேற்கு கோட்ட தலைமையகம் அமைந்துள்ள பொக்ரா நகருக்குச் சென்று, அங்கு மூத்த ராணுவ அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார். காத்மாண்டில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்திலும் அவர் அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், அதிபரும், நேபாள ராணுவத்தின் தலைமை தளபதியுமான வித்யா தேவி பண்டாரியை ஷீதல் நிவாஸில் உள்ள அவரது அலுவலகத்தில் விபின் ராவத் சந்தித்தார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவருடன் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து, பிரதமர் ஷேர் பகதூர் தியூபாவை விபின் ராவத் சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியா-நேபாளம் இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், இரு நாடுகளும் பரஸ்பரம் பலன் பெறும் விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினர் என்று நேபாளத்தைச் சேர்ந்த 'மைரிபப்ளிகா' இணையதளம் தெரிவித்துள்ளது.