சீனாவின் இணையதள செய்தி நிறுவனமான 'பியர் விடியோ' வெளியிட்ட விடியோ ஒன்று தற்போது அங்கு வைரலாகி வருகிறது. அந்த விடியோவில் நடந்த விநோத சம்பவம்தான் இதற்கு காரணம்.
சீனாவின் டாங்குவான் ரயில் நிலையத்தில் ஒரு பெண் செய்த காரியம் அங்கிருந்தவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது. அதோடு நிற்காமல் அந்த விடியோ பதிவு இணையத்திலும் வைரலாகப் பரவி வருகிறது.
அந்த ரயில் நிலையத்தின் கண்காணிப்புப் பகுதியில் பயணிகளின் பொருட்களை சோதனை செய்யும் எக்ஸ்ரே மிஷின் ஒன்று உள்ளது. அதில், தனது ஹேண்ட்பேக்கை பிரிய விரும்பாத பெண் அதில் குதித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த எக்ஸ்ரே மிஷினின் உள்ளே மனிதர்கள் சென்றால் கதிர்வீச்சு தாக்கத்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று அங்கிருந்த பாதுகாவலர் எச்சரித்தும் தனது ஹேண்ட்பேக்கை பிரிய விரும்பாத பெண் ஒருவர், அந்த எக்ஸ்ரே மிஷினுக்கு பொருட்களை கொண்டு செல்லும் கன்வேயர் பெல்டில் குதித்து அதில் பயணித்தார்.
இந்த சம்பவம் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி-யில் பதிவாகியிருந்தது. தனது ஹேண்ட்பேக் திருடு போகாமல் இருக்கவே தான் இவ்வாறு செய்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.